About Me

Friday, March 11, 2022

காகிதப் பூ நெனப்பு(2)

Fly...

           ' மனம் கொத்தும் பறவை' 

"வாடாத 
காகிதப் பூக்களைப் போல
சில நினைவுகள் 
காய்ந்து போவதே இல்லை".

      'நோக்குவன எல்லாம் அவையே போறல்' - என்ற கூற்று காதல் வயப்பட்டவர்களுக்குப்  பொருந்தும். தமிழ் இலக்கணம் சொல்கிறது. 

 உயிர்களின் 'புவிஈர்ப்பு விசை' 'காதல்'. காதல் எதன் மீதும் படரும். பாரபட்சம் ஏதும் இல்லை. பூக்களின் மீதான காதல் புன்னகையில் தொடங்கி மெளனத்தில் தொடரும்.  கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் சில நினைவுகளில் நனையும். ஈரம் உலர்த்தியபடி நினைவுகளில் மனம் கோதும்.  சிறகு விரித்துப் பறக்கும். 

    பூக்களைப் பற்றி எழுதலாம் என்றெண்ணி "பூக்களின் பாடசாலையில் உலாப் பூக்கள்" எனப் பெயரிட்டேன். 


உண்மையில் எனக்குப் பாடங்கள் மண்டையில் ஏறாது. அது ஒரு காலம். கல்லூரிக்குள் நுழைந்த போது தான் 'கல்வி' மீதான புரிதல் ஏற்பட்டது. அதற்கு முன்னர் வரை கல்விக் கூடம் செல்வதை 'எனது போறாத காலமாக' நினைப்பேன். 

        வரலாற்றுப் புத்தகங்களில் அச்சிடப்பட்ட அசோகர், பாபர், ஔரங்கசீப், புத்தர், ஜான்சி ராணி அம்மையார், நெப்போலியன், அலெக்சாண்டர் போன்றோரின் முகங்கள் இன்னமும் சுவரில் மாட்டி வைத்த ஓவியச் சட்டகமாக மனக் கூட்டுக்குள் ஊஞ்சலாடுகின்றன.

 ஆனால் வரலாற்று முகங்களின் விலாசங்கள் சொல்லும் வரலாறு மனதில் நிற்கவில்லை.
 பஞ்சாரக் கூடை எடுத்தவுடன் ஓட்டமெடுக்கும் 'நாட்டுக்கோழிகள்'   போல பாடங்கள் குறித்த நினைவுகள் ஓரே ஓட்டமாக மனதை விட்டு ஓட்டமெடுக்கும். 

ஆனால், இன்று பாடங்களை படங்களாக்கி 'செயல்முறைக் கற்பித்தல்' வழி குழந்தைகளுக்கு  கல்வியின் மீதான பிரியத்தை  மனசுக்குள் கடத்துகிறார்கள். 

 அன்று... 
புதுப்புத்தகங்கள் வாங்கியதும் அதன் வாசனை நுகர்வேன். புத்தகங்களுக்குள் நுழைந்து படம் பார்ப்பேன். படிக்கச் சொன்னால் புத்தகம் தலைகீழாகப் பிடித்திருப்பது அறியாமல் 'படிக்கிறேன் பேர்வழி' என வேறு எங்கோ 'பராக்கு' பார்த்தபடி அமர்ந்திருப்பேன்.
பிறகு எங்கள் வீட்டு 'Head master' என்னை மெச்சி புத்தகத்தை நேரே பிடித்து படிக்கச் சொல்லி முதுகில் ஒன்று போட்டுவிட்டு காய்கள் நறுக்க அமர்வார். 
அப்பா நடுநிலைப் பள்ளியின் 'Head master'. அப்போது 'strict officer' . வீடும் அப்பாவிற்கு பள்ளிக் கூடமாகவே தெரியும்.

 அப்பா அம்மாவிற்குச் செய்யும் ஆகச் சிறந்த உதவி காய்கள் நறுக்கித் தருவது தான். தினம் காலையில் நடு நாயகமாக அமர்ந்து காய்கள் நறுக்கியபடி முன் அமர்ந்து படிக்கும் எங்களைப் படித்தபடி காய்கள் நறுக்குவார் எங்கள் அப்பா. அண்ணன் மட்டும் வராந்தாவில் 'என் ஏரியா உள்ள வராதீங்க' என தனி ஆவர்த்தனம் புரிவார்.
இச்சூழல்கள் எங்கள் பள்ளிக்கால நாட்களின் தின அஜந்தாவாக நடைபெறும். இச்சூழல்கள் '80' -களின் மத்திமத்தில் இடம் பெற்றவைகள். 

வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு 'பூக்களின் பாடசாலைக்குள்' இருக்கும் ஞாபகம் மறந்து போயிருக்கும். பூக்களின் மீதான நினைவுகள் தான் '80' -களின் மத்திமத்திற்கு பறந்து வந்திருக்கிறது. 


'காகிதப் பூக்களின்' நினைவில் உறைந்து கிடக்கும் அந்நாள் நிகழ்வுகளை மனம் கொத்திக் கிளறுகிறது. 

'தேநீர்' தருணம்... 


 ஒவ்வொரு பொருளும் ஏதேனும் சில நினைவுகளை மனசுக்குள் கடத்தும். 
'முல்லைப் பூ' வள்ளல் 'பாரியை' நினைவு படுத்தும்.

வள்ளல்  'பாரி' 'முல்லைக்கொடியை' நினைவுபடுத்துகிறார். சில வேளைகளில் நினைவுகள் வண்ணக் கண்ணாடி மீன்களாக மனக்குடுவைக்குள்  நீந்தும். சில வேளைகளில் சிறகு முளைத்த பறவையாகிப் பறக்கும்.

'காகிதப் பூக்களின்' நினைவுகள் எனது பள்ளிக் காலத்து  நினைவுகளுக்கு இழுத்துச் செல்கிறது. 

மதுரை-
' தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில்' 10வது வரை படித்த காலங்கள் எனக்கு வனவாசம் போலத் தான் கழிந்தது. ஜெய்ஹிந்துபுரத்து நாட்கள் கொடுத்த சந்தோசங்கள் மட்டும் தான் அந்நாட்களைக் கடக்க தோணியாக இருந்தது.

காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளி தொடங்கியவுடன் ஓரிரு நாட்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு பட்டியலில் கடைசி இடம் பிடிக்கும் என் போன்றவர்களுக்கு 'தலைமையாசிரியர்' பொறுப்பில் இருக்கும் 'பாதிரியார்' நல்ல பல பரிசுகளை கைகள் நிறைய தந்து அனுப்புவார். பின் மதிப்பெண்
 அட்டையில் தந்தையின் கையொப்பம் பெற்று வருதல் அவசியம். இல்லையெனில் வகுப்பில் அனுமதி இல்லை.  

என் சகாக்கள் சிலர் தந்தை கையொப்பத்தை தாங்களே இட்டுக்கொண்டு வகுப்பிற்கு திரும்பிவிடுவார்கள். நான் இந்த விஷயத்தில் 'கண்ணியம்' காத்து தந்தையின் கையொப்பத்தை அவரிடம் இருந்து பெறும் வரை பள்ளியிலிருந்து வெளிநடப்புச் செய்வேன். அந்நாட்கள் எனக்கு கிடைத்த "இன்பச் சுற்றுலா". 

அப்படியான ஓர் இன்பச் சுற்றுலா நாளில் 'காகிதப் பூக்களின்' அருகாமை எனக்குக் கிடைத்தது.


 "திருமலை நாயக்கர் மஹால்" தெருவிற்குள் நுழைந்து திரும்பினால் சாலையோரம் குதிரை வண்டிகளும், சைக்கிள் ரிக்ஷாக்களும் இளைப்பாறிக் கொண்டிருக்கும். நடையோரம் 'காகிதப் பூக்கள்' வேலியாகப் படர்ந்து பூக்குடை கள் விரித்து நிற்கும். 

குதிரைகள் வாயில் புற்கட்டுக்கள் உள்ள  ஒரு பை தொங்கும். குதிரைகள் பைக்குள் தலை நுழைத்து புற்கள் உண்டு அசைபோடும். ரிக்சாக்கார நபர்கள் பீடி புகைத்தபடி நடையோரம் அமர்ந்திருப்பார்கள். அவர்களைக் கடந்து நாயக்கர் மஹால் சந்து நுழைவேன். 


முன்புறம் உள்ள இடப்பக்க பகுதி எனது ஆஸ்தான இடம். இடப்பக்கம், வலப்பக்கம் என எங்கும் 'காகிதப் பூக்கள்' கொடி பிடித்து வேலிப் பூக்களாகப் படர்ந்து நிற்கும்.


தரையெங்கும் பூக்கம்பளங்கள் விரித்துக் கிடக்கும். 

நான் அமர்ந்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் கிளி ஜோசியர் அமர்ந்து அவ்வப்போது வந்து அமர்பவர்களுக்கு ஜோசியம் சொல்லுவார்.

எதிர் காலம் உரைப்பார். கிளி லாவகமாக சீட்டுக்களை எடுத்துக் கொடுத்து சட்டகப் பெட்டிக்குள் சென்று வேடிக்கை பார்க்கும்.

ஜோசியம் கேட்க வருபவர்கள் கிளிக்கும், ஜோசியக்காரருக்கும் வாழ்வாதாரம் காப்பவர்களாக இருப்பார்கள். இடைவேளை களில் ஜோசியக்காரர் தன் சிறு டப்பாவைத் திறந்து சிவந்த மிளகாயை விரல்களால் கிள்ளிப் போடுவார். மிளகாய் உண்ணும் கிளி ஆச்சரியத்தைக் கடத்தும். கிளிஜோசியப் பெட்டியின் மேல் 'காகிதப் பூக்கள்' வந்து இறங்கும். காற்றில் கடந்து போகும்.

சில நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு எதிரில் ஒரு 'கிளி ஜோசியக்காரரை' சாளரத்தின் வழியே கண்டேன்.

ஆச்சரியமாக இருந்தது. கீழிறங்கி சந்திக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில் சைக்கிள் ஏறி தன் கிளிப் பெட்டியோடு பறந்து போனார்.

நான் மூன்றாவது மாடியில் சாளரத்தின் வழி பார்த்தபடி சட்டென கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டேன்.

எங்கேனும் எவருக்காவது 'கிளி ஜோசியம்' சொல்லிக் கொண்டிருப்பாரா? இன்னும் அமர்ந்து 'கிளி ஜோசியம்' கேட்கிறார்களா? ஒரு நாளில் எத்தனை பேர் கேட்பார்கள்? கிளிக்கு உணவு சிவந்த மிளகாய் தானா? ஏதேதோ கேள்விகள் மனசுக்குள் கிளைவிட்டன. கிளிஜோசியக்காரர்களைக் கண்டால் 'காகிதப் பூக்கள்' மனசுக்குள் பூக்கும். 


"காகிதப் பூக்களின்" நினைவுகள் அலாதியானது. 'தூயமரியன்னை' பள்ளிக்கு வெளியே நிமிர்ந்து நிற்கும் தேவாலய சுற்றுப் பகுதிகளெங்கும் 'காகிதப் பூக்கள்' வேலியாகப் படர்ந்து கண்களை நிறைக்கும். ஜெய்ஹிந்துபுரத்து வீதிகளில் பெரும்பாலும் 'காகிதப் பூக்கள்' வேலிக்கொடி பிடித்து விழித்திருக்கும். அப்பொழுது 'ஜெய்ஹிந்துபுரம்' பதட்டம் நிறைந்த பகுதியாகப் பார்க்கப்பட்டது.

சர்வ சாதாரணமாக பகற்பொழுதில் 'கத்தி கபடாக்களோடு' தலை தெறிக்க ஓடி வருவார்கள். பதட்டமாக கத்தியபடி கடந்து போவார்கள். கண் எதிரே மனம் பதறும் காட்சிகள் அரங்கேறும். 

இப்பேற்பட்ட பகுதியில் பெரிய வீடுகளில் சம்பளம் வாங்காத காவல்காரர்களாக 'காகிதப் பூக்கள்' முள்ளோடு கொடி பிடித்து படர்ந்து நிற்கும். காகிதப் பூக்கள் வேலிக்காரனாகக் காவல் காக்க காணும் கண்களின் வழியே மனம் கொள்ளை போகும். 

நிறைய பகிர எண்ணுகிறேன். காலம் கருதி 'காகிதப் பூக்களை' இதயத்திற்கு அருகில் மனதளவில் இருத்தி முடிக்கிறேன். 

     ஜெய்ஹிந்துபுரத்து வீட்டைக் காலி செய்து புறப்பட்ட அன்று அங்கிருந்து நேரே பள்ளிக்குச் சென்றுவிட்டோம். பள்ளி முடிந்து மாலையில் நாங்கள் மூவரும்(அண்ணன், தம்பி) நேரே நாங்கள் புதிதாகக் குடி பெயர்ந்த மதுரை அண்ணாநகரின் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' வீட்டிற்குத் திரும்பினோம்.

 காலையில் ஜெய்ஹிந்துபுரத்தைக் கடக்கும் முன் 'காகிதப் பூக்களின்....

வீட்டு 'காகிதப் பூக்களை' கையோடு எடுத்துக் கொண்டேன்.

மாலையில் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' சென்றபோது அங்கிருந்த வீடுகளெங்கும் 'முல்லைப் பூக்கள்' கொடி பிடித்து மனம் பரப்பின.

வாசமற்ற 'காகிதப் பூக்கள்' எனது பைகளில் உறைந்து கிடக்க வாசம் மிக்க 'முல்லைப் பூக்கள்' தோரணங்கள் கட்டி வரவேற்றன. 


 'முல்லைப் பூக்கள்' ச்சைக் கொடி அசைத்து எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயங்களைத் தொடங்கி வைத்தன. 

னப் பறவை மனம் கொத்தும்!

பறக்கும்… 


                             





இருதய். ஆ 

 






4 comments:

JOHN A said...

ஒவ்வொரு பூக்களைப்பற்றி எழுதும்போது அதோடு உங்கள் வாழ்க்கை அனுபவங்களை கோர்க்கும் வித்தை அருமை...💐

Irudhy.a said...

தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி சேட்டா...

Thomas said...

🌟🌟🌟

Irudhy.a said...

Thanks Thomas...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...