About Me

Friday, March 4, 2022

'வாசமில்லா மலர் இது' ...

Fly...

           மனம் கொத்தும் பறவை... 

"வாசமில்லா மலர் இது!
வண்ணங்கள் நிறைந்தது... 
வாடாது. வதங்காது!
பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த
இறகாக...
      கொடி பிரிந்து 
       தரை இறங்கும். 
       தரையிறங்கி... 
     கரையோரம் ஆடும் 
   சிறு படகு போல... 
        இடம் வலமாக
            முன் பின்னாக 
              காற்றில் நகர்ந்து நகர்ந்து
             கண்கள் நிறைக்கும். 

         வாசமற்ற மலர் இது! 
             எண்ணி முடியாது.
எண்ணமுடியா கூட்டமிது...
 ஒரு கூட்டுப் பறவைகளாக!
    முள்ளோடு வேலியாக... 
       கொடி பிடித்து வேர் பரப்பும்"...

  பூ மரமோ? பூங் கொடியோ? 

   பூவுலகில் பூவிதன் பெயர்.....? 
 
             "போகைன் வில்லா" .... 

தேநீர் தருணம்... 


'தாவரவியல்' அறிவு  எப்பொழுதும் எனக்குத் தொலைவு. 

வாசமற்ற 
வண்ணங்கள் நிறைந்த
இப்பூக்களின் செறிவுள்ள பெயர் 
இனிக்கும் தமிழில் என்னவாக இருக்கும்? 


பூக்களின் பாடசாலையில்.... 

இனிதாகும் தமிழில்... 

               " காகிதப் பூக்கள்..." 


"காகிதம்" அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியா ஒர் அங்கம். 
  கனவுகள் கரை ஏறும்
   கட்டுமரம் 'காகிதம்'. 

படைப்புலகத்து தேவதைகளாக உலா வரும்' காகிதங்கள்' ஒரு பூக்களுக்குப்  பெயரானால் அந்தப் பூக்களும் தேவதைகள் தானே! 

'போகைன் வில்லா" எனும்
' காகிதப் பூக்களை' பூக்கும் கொடித் தாவரம் என்கிறது தாவரவியல். ரோசாவைப் போலவே காகிதப் பூக்களும்  முட்கள் சூழ பூக்கின்றன. 

முட்கள் நிறைந்த' காகிதப் பூக்களின்  கொடிகள் பூக்களுக்கு வேலியா!  அல்லது பூக்களை நட்டவர்களுக்கு வேலியா? ஆச்சரியமும், கேள்வியும் கைப் பிடிக்கும். பெரும்பாலும் காகிதப் பூக்கள் வேலிச்சுவர்களில்  'வேலிப்பூக்களாக' முட்களுடன்  கொடி பிடித்துப் படர்ந்திருக்கும். கண்ட கண்களை வண்ணங்களால் நிறைக்கும். 
மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு, ரோசாப் பூ சிவப்பு  வண்ணங்களில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் கிடக்கும். மனம் அவற்றைக் கடக்க மறுக்கும். 

 வாசனையற்ற பூக்களாக மலர்வதும், பூவையரின் கூந்தல் சேராமல் காட்சிப் பொருளாக உறைவதும், கொடி பிரிந்தும் வாடாது வண்ணம் மாறாது ஒரு 'யோகி' போல தரைகளிலும்,  வேலியோரப் பாதைகளிலும் காகிதப் பூக்கள் .  அமர்ந்திருக்கும் '

 வாசமில்லா 'காகிதப் பூக்கள்' மனசுக்குள் கடத்தும் நினைவுகளுக்கும் வண்ணங்களுக்கும் என்றும்  வாசனைகள் உண்டு. 

காகிதப் பூக்களின் வாசமுள்ள நினைவுகள் 


 கடலில் நீந்தும் மீன்களும், வான் பறக்கும் பறவைகளும் கடக்கும்   வழிகளில் தடங்கள் ஏதும் தென்படுவதில்லை.  ஆனால், நம் வாழ்வில்  கடக்கும்  தருணங்கள் சில அழிக்க முடியா நினைவுகளை விதைத்துக் கடக்கின்றன.

 'காகிதப் பூக்கள்' எனக்குள் வாசமுள்ள பல நினைவுகளை மலர வைத்திருக்கிறது. என் நினைவுகளை கண்ணுற்று வாசிக்கையில் காகிதப் பூக்களின் வாசமான நினைவுகள் உங்கள் மனசுக்குள் பூக்கலாம்.

"'காகிதப் பூ' நெனப்பு(பூ)" ...


'காகிதப் பூக்களின்' தலைப்பில் ஏராளமான கவிதைகளும், கதைகளும் எழுதப்பட்டுள்ளன. எழுதப்படுகின்றன. ஏதோ ஒரு வசீகரத்தை வாசமற்ற காகிதப் பூக்கள் தன் கொத்துகளுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன.

'காகிதப் பூக்கள்' விதைத்த நினைவுகளில் மூன்று விதச் சூழல்களை, அழகான அந்நாட்களின்  தருணங்களை மறக்க  முடியாது.

'காகிதப் பூ' முதல் நெனப்பு

  மதுரை 'ஜெய்ஹிந்துபுரத்தில்' வசித்த போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த  காலம். எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி ஒர் அரிசி ஆலை. நீண்டு பரந்த பகுதி. ஆலைக்கு அருகில் ஒர் அழகான வீடு.  கலாரசனையோடு புள்ளிக்கோலமிட்டால் எப்படி இருக்கும். அப்படி அழகான புள்ளிகளால் இடப்பட்ட வண்ணக் கோலமாக அந்த வீடு காணும் கண்களை நிறைக்கும். 


நிறைந்த கண்களின் கரு விழிகளில் வண்ண வண்ண  'காகிதப் பூக்கள்' தங்கள் முகம் பார்க்கும். 
வெள்ளை, இளஞ்சிகப்பு, 'ரோசாப் பூ செவப்பு' , ஆரஞ்சு, மஞ்சள் வண்ணம் என கொத்துக் கொத்தாகப் பூத்து அந்த வீட்டைச் சுற்றி வேலி அமைத்திருக்கும். தரையெங்கும் குட்டிக் குட்டி காகிதப் பூ தீவுகளாக விரிந்து கிடக்கும். 

காகிதப் பூக்களின் வீடாகவே அந்த வீட்டின் பெயர் என் நினைவில் வாசம் செய்கிறது. 
'பெந்தக்கோஸ்தே' பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவக் குடும்பத்தினர் அந்த வீட்டில் வசித்தார்கள். 
'காகிதப் பூக்களின் வீடு அவர்களின் சொந்த வீடு. 

அந்த வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாலையில் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில்' மறைக்கல்வி' வகுப்பு நடத்துவார்கள். தவறாமல் கலந்து கொள்வேன். சில ஞாயிறுகள் எப்படியோ கை நழுவிப் போகும். வகுப்பு முடிகையில் எல்லோரது  கைகளிலும்  ஒரு  'பட்சணம்' கை சேர்வது நிச்சயம். பட்சணங்களை எதிர் நோக்கி காத்திருக்க மறைக்கல்வியின் இறுதிப் பாடல் தொடங்கும். 

    'சந்தோசம் பொங்குது. சந்தோசம் பொங்குது... 
சந்தோசம் என்னில் பொங்குது... 
இயேசு என்னை இரட்சித்தார்! 
முற்றிலும் என்னை மாற்றினார்... 
சந்தோசம் என்னில் பொங்குது...' 
      - கைகள் தட்டி சந்தோசக் குரலெடுத்து அந்த வீட்டின் அக்கா நடு நாயகமாக நின்று தலையை இடம் வலம் அசைத்துப் பாடுவார். நான் "ஆ" வென்று வாய் பிளந்து அக்காவிற்கு சற்றுத் தள்ளி தடல் புடலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் பட்சணங்களைப் பார்த்தபடி...    

       "சந்தோசம் பொங்குது... 
        சந்தோசம் பொங்குது..."                        சந்தோசம் என்னில்       பொங்குது"... 
    பாடிக் கொண்டிருப்பேன். 


    நடுவில் பாடிக்கொண்டிருக்கும் அக்காவின் தலையசைப்பிற்கு எதிர்விசையில்  தலையசைத்தபடி அக்காவிற்குச் சற்றுத் தள்ளி நடக்கும் களேபரங்களில்... 
       'கை சேரவிருக்கும் பட்சணம்          என்னவோ?' 
என அலைபாய்ந்தபடி அமர்ந்திருப்பேன். அமர்ந்திருப்போம். என் 'சகோதரர்கள் ' இருவரையும் சேர்த்துச் சொல்கிறேன். சில ஞாயிறுகளில் மூத்தவர் 'டேக்கா' கொடுத்துவிட்டு அவரது தோஸ்த்துகளுடன் 'சதுரங்கம்' விளையாடப் போய்விடுவார். நான் என் தம்பியுடன் தட்டாமல் கலந்து கொள்வேன்.  என் தம்பி... 


' இன்னும் கொஞ்ச நேரம் பாடினாத் தான் என்ன? 'இன்னும்
  நான் தூங்கணும்'
         - என்பது போல அமர்ந்திருப்பான். 

       "சந்தோசம் பொங்குது.... 
சந்தோசம் பொங்குது...." 

'காகிதப் பூக்கள்' நிறைந்த அந்த வீடு மனம் முழுக்க சந்தோசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. 
 
காகிதப் பூக்களின் வீட்டைக் கடக்கும் போதெல்லாம் தரையில்  ஒரு' யோகி 'போல அமர்ந்திருக்கும் வெள்ளைக் காகிதப் பூக்களை கைகளில் பற்றி சொக்காயின் இடப்புற பையில் வைத்துக் கொள்வேன். 


சிகப்பு நிற காகிதப் பூவை அதன் சிறிய காம்புப் பகுதியை விரல்களில் வைத்து சுற்றிச் சுற்றி விளையாடிய படி நடந்த ஞாபகங்கள் காகிதப் பூக்களை பற்றி யோசிக்க ஆரம்பித்தால்  சட்டென "தோ... வந்துட்டேன்' என மனசுக்குள் நடைபயில ஆரம்பித்துவிடும்.

 வாடாத' காகிதப் பூக்களை' இதயத்தின் அருகாமையில் வைத்துக் கொண்டதினால் அதன் நினைவுகளுக்கு மட்டும் வாசம் உண்டு. 

காகிதப் பூக்களின் நடை தொடரும். 


மனப் பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்... 


இருதய். ஆ


 









2 comments:

JOHN A said...

காகிதப்பூ போலவே வண்ணங்களும் எண்ணங்களும் அருமை...

Irudhy.a said...

Thanks cheta...

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...