About Me

Tuesday, May 3, 2022

வளரும் பிறை "ஈகை"

Fly... 


           மனம் கொத்தும் பறவை 


"வான் வீதியில்

உலா வரும் நிலா… 

தேயும்… 

வளரும்… 

வளர்ந்து தேயும். 

தேய்ந்து வளரும்…

முழுமதியாக முகம் காட்டும். 

நிலவின் முகமோ...

வாழ்வு!" 


நிலவைப் பற்றி எழுதலாம்


  "நிலா அது வானத்து மேலே…" 

பாட்டுப் பாடலாம். 


நிலவைப் பார்த்தபடி நிலாச் சோறு உண்ணலாம். 


நிலவைக் காட்டி குழந்தைக்குச் சோறு ஊட்டலாம். 


இவை எதுவுமில்லாமல்

" தேமே" என மொட்டைமாடியில் அமர்ந்து கொண்டு கண் சிமிட்டும் நட்சத்திரங்களோடு கைகோர்த்து நிலவைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். 


நிலவில் குடியேற்றம் தொடங்கிவிட்டால்

' வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கா?குடியேறலாமா?, வேண்டாமா?, 

நம்ம சாதி சனங்க அங்க

இருக்காகளா?- 

என ஓரு எட்டு பார்த்துவிட்டு ஆகுற சோலியப் பார்க்கணும்' 

நிலவைப் பார்த்து மனக் கோட்டை கட்டலாம். 


நிலவோடு வேறு எப்படி தொடர்பில் இருக்க முடியும். வேறு வழி  எதுவும் இருக்க முடியுமா? 


முடியும் என்கிறது ஒரு "மார்க்கம்" . 



நிலவை  மறை மார்க்கத்தின் அங்கமாகக் கொண்டது' இஸ்லாம்'. 

தேய்ந்து வளரும் பிறைநிலவில் தங்களைக் கரைத்துக் கரையேறும் மார்க்கங்களை  வாழ்வின் பயண வரைபடமாகத் தந்திருக்கிறது 'இஸ்லாம்' . 


பிறையின் உரு கண்டே இஸ்லாமியர்கள் தங்களை உருக்கி உரமேற்றும் நோன்பைத் திறக்கிறார்கள்




முப்பது நாட்களின் கட்டுப்பாடான  நோன்பு முடித்து வளரும் 'பிறை' கண்டு வசந்த காலத்திற்குள் நுழைகிறார்கள். 


இஸ்லாமியர்கள் கைக்கொள்ளும்  ஐந்து கடமைகள்

  1. கலிமா

  2. தொழுகை

  3. நோன்பு

  4. சகாத்

  5. ஹஜ்ஜு(புனித யாத்திரை) 

எனும் ஐந்து தூண்களை ஆதாரமாகக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது 'இஸ்லாம்'. 


ஐந்து தூண்களுள் மிக முக்கியமான தூணாக 'நோன்பு' எண்ணப்படுகிறது



"நோன்பு என்றால் என்ன?" என்பதன் பொருளை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் நோன்பின் மூலம் அறியலாம். 


அதிகாலை 4-15 மணிக்குத் தொடங்குகிற உண்ணா நோன்பை   சூரியன் மறைந்த பின்னே முடிக்கிறார்கள். அதுவரை நோன்பில் இஸ்லாமியர்கள் "strict officers" தான்.


நானெல்லாம் 'உபவாசம்' மேற்கொள்கையில் வடை, தேநீர், பிஸ்கோத்துகளை விரதத்திற்குள் அனுமதித்து விடுவேன். குறிப்பாக, 'தேநீர்' குற்றால அருவியாகி தொண்டையைத்  திறக்கும். மற்றபடி மதியச் சாப்பாடு, மாலை ஆகாரங்கள் எல்லாம் களை கட்டும். அன்றைய உபவாசம் முடியும். 


அப்புறம் ஊர் உலகில் மேற்கொள்ளும் எல்லா உண்ணாவிரதங்களையும் நாம் அறிவோம். 


ஆக… 

'நோன்பு "என்றால் என்ன?' என்பதனை உலகிற்குக் காட்டும் மறையாக 'இஸ்லாம்' இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதேனும் இருக்க முடியுமா? 


முப்பது நாட்கள் கட்டுப்பாட்டோடு நோன்பிருக்கையில் பல்வேறு தவ முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். 



ஒவ்வொரு தொழுகைக்கு முன்னரும் தங்களின் புறத்தைத் தூய்மையாக்குவது போல அகத் தூய்மையும் காக்கிறார்கள். 

"பொய்யுரைத்தல்,     பேராசைகள், உடற் இச்சைகள், பொறாமைகள்"

போன்ற 

பலவித தீவிரவாதிகளை மனத் தூய்மை காக்க கைநெகிழ்கிறார்கள்


நெகிழ்ந்த கைகளை சிவந்த கரங்களாக மாற்றுவது இஸ்லாமியர்களின் "ஈகை". 



"இழப்பதற்கு எதுவும் இல்லை. 

பெறுவதற்கு இந்த உலகம் இருக்கிறது" 

-மனம் அறிந்த விஷயம் இது. 


மனம் கைக்கொள்ள சிரமப்படும் ஒன்றை 'இஸ்லாம்' மாற்றுச் சிந்தனையோடு தங்களின் மார்க்கமாக உள்ளங்கைகளில் வரைகிறது. 



"ஈ" அதுவே "கை" களில் விரியும் "ரேகை" என்கிறது இஸ்லாம். 


ஒன்றைத் தந்து மற்றொன்றைப் பெற்றுப் பழகிய மனதிற்கு" ஈகை" வேற்றுக் கிரக மனிதனாகத் தெரிகிறது. 


இஸ்லாம் அறிவுறுத்தும் "ஈகை" எதிர்பார்ப்புகளற்றது. 



இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் 'ரமலான்' ஒன்பதாவது மாதம். இம்மாதத்தை வசந்த காலத்தின் தொடக்கமாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். 


'ரமலான்' காலம்... 

பாவங்களைத் துடைத்தெறிந்து புண்ணிய பலன்களைச் சேர்த்துக் கொள்கிற காலம். 

'நரக வாசல்' அடைக்கப்பட்டு 'சொர்க்க வாசல்' திறந்தே இருக்கும் காலம். 

'சொர்க்க வாசல்' தேடும் மனங்களுக்கு

 ஈகையால் விளைந்த நற்பலனே சொர்க்க வாசலின்  நுழைவுச்சீட்டாக அமையும்' என்கிறது இஸ்லாத் மார்க்கம். 

 

அனைவருக்கும்

                   "ஈகைத் திருநாள்" 

நல்வாழ்த்துகள்... 

        



https://www.facebook.com/reel/412075234083373?fs=e&s=cl

"ஈகை"... 

இருப்பதைக் கொடுப்பதல்ல. இருப்பதையே கொடுப்பது. 

இல்லையெனினும் இரந்து கொடுப்பது. 


மனதிற்குத் தெரியும். மனதை ஆளுமை செய்யும் அறிவிற்கு 

"இதெல்லாம் ஆவறதில்ல"

எனச் சொல்லத் தெரியும். சொல்லித் தருவது வாழ்வின் சில சூழல்களே.


உண்மை தான். இன்றைய சூழலில் கைகளே  அறியாமல் கொடுக்கும் "ஈகை" சற்றே சிரமம் தான். காலச் சூழலின் சுழற்சி மனசுக்குள் அயற்ச்சியைக் கடத்தியிருக்கிறது. காரணம் "வினைப் பயன்" என எண்ணிக் கொள்ளலாம். 


"ஈகை" என்றால் என்ன? என்பதனை நம் தமிழ் மரபும் பறை கொட்டிச் சொல்லியிருக்கிறது. 


முல்லைக்குத் தேர் மட்டுமா தந்தார்

' பாரி' ? தன்னை எதிர்த்து முன் நிற்க முடியாத மூவேந்தர்களின் சூழ்ச்சியான யாசகத்தினை அறிந்தும் தன்னுயுரையே தந்தார் பறம்பின்

" வேள் பாரி"! . 


குளிர் கண்டு நடுங்கிய மயிலுக்குத் தனது போர்வையைப் போர்த்தி மயிலின்  குளிர் நீக்கிய "பேகன்",

தன் வாழ்நாள்  நீளக் கிடைத்த "நெல்லிக்கனி"யை

தான் உண்ணாமல் தமிழ் மூதாட்டி "ஔவை"க்குத் தந்து தமிழ் வளர துணையானார் வேந்தன்  "அதியமான்" - என 

இன்னும் எத்தனையோ உன்னத நிகழ்வுகளை அறிவோம். 


" ஈகை" இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. உலகத்தின் பொது மறையாகவும் உருவெடுக்கட்டும். 


" வறியார்க்கொன்று ஈவதே ஈகை "

குறுகத் தரித்த" குறள்" சொல்லும் மறையும் இதுவே. 


மனப் பறவை மனம் கொத்தும்!

பறக்கும்….


         - இருதய். ஆ

    
           












Sunday, May 1, 2022

நிறமிகள்...

Fly...


            மனம் கொத்தும் பறவை

நம் எண்ணம் 
நம் வண்ணம்...
நிறங்களில் விரியும் வாழ்வு!


கடக்கும்  நொடிகளில், கடக்கும் நிமிடங்களில், 

கழியும் பொழுதுகளில் நமது ஒவ்வொரு நகர்வும் நாளைக்கான தொடக்கமாகவோ, நல்ல நினைவுகளாகவோ ஏன் மறக்க நினைக்கும் சில சூழல்களையோ விதைக்கும். 



"காலம்" வெவ்வேறு நிறங்களில்  நம் கண் முன் சில பல வரைவுகளை   இட்டு முடிக்கும். 


கடந்தவைகள் எல்லாம் நினைவுகளாக சிறகசைக்கும். பழம் நினைவுகள் உண்ணும். மீண்டும் மனம் பறக்கும். 



மே-1 

https://www.facebook.com/reel/682535933073419?fs=e&s=cl



உழைப்பின் நினைவுகளில் சிறகசைக்கும் மனம். 

உழைப்பின் நிறம் 

சிவப்போ? கறுப்போ? 

உழைப்பின் சுவை

கரிப்போ

      உழைப்பின் நெடி எதுவோ? 

       பதில்கள் எதுவாயினும்

"நகர்வே" 

உழைப்பின் மையம். 


உழைப்பின் வேர்களுக்கு 

வியர்வை தான் நீர் ஆதாரம்! 

வியர்க்காத உடலில் அழையா விருந்தாளியாக உப்பு வந்து தங்கும். 


உழைப்பு, வியர்வை, உப்பு

மூன்றும் 

உடற் கூறின் 

"ஆய்த எழுத்துக்கள்" . 


உழைப்பின் நிறம் உணரும் 


"மே" தின

 நல் வாழ்த்துக்கள்…



நகர்தலின் குறியீடு 'நதி' 


நதி நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும். கரையோர வேர்களின் தாகம் தீர்க்கும். 


"உழைப்பு" வாழ்வின் தாகம் தீர்க்கிறதா? 


நிகழும் காலத்தில் இதற்கான விடை தேடினால்  முடிவற்ற பாதையாக பயணம் நீளும். 


உழைக்கும் வர்க்கத்தில் நிறைய வண்ணங்கள் உண்டு. 


எண்ணுபவர்கள் 'முதலாளிகள்'.



எண்ணங்களை

 ஈடேற்றம் செய்பவர்கள் 'தொழிலாளிகள்'. - 



      இரண்டு நிறங்கள் தான்.  உழைப்பின் நிறங்களோ? 


அன்று… 


பணியிடங்களில்

ஒரு நாளின் 

பெரும்பான்மையான கணங்களை பணியிலேயே கனத்த மனச்சுமையுடன் கடந்திருக்கிறார்கள். 


உழைப்பின் வாசம் சுகந்தமாக இல்லாமல் நாசி மறுக்கும் நெடியாகப் பொழுதுகள் கரைந்திருக்கிறது.


உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் கைகள் உயர்ந்தது. உயர்ந்த கைகள் அனைத்தும் உழைப்பிற்கு எதிரானவைகள் அல்ல. 

இலாப நோக்க எண்ணங்களால் அழுத்தும் முதலாளித்துவத்திற்கு எதிரானவைகள். வரலாற்றில் அறியலாம். 


வரலாற்றின் பக்கங்கள் மயிலிறகால் எழுதப்பட்டவைகள்  அல்ல. அறிவோம். 


பணியைச் சுமையாக்கிய கணங்களை வென்ற நாளின் அடையாளமாக 'மே தினம்' கொண்டாடப்படுகிறது. 


   ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தை "மூன்று எட்டுக்களாக" பிரித்தார்கள். 



"முதல் எட்டு" 

பணிப் பொழுது. 


"இரண்டாம் எட்டு" 

பொழுதை இனிமையாக்கும் பொழுது. 


"மூன்றாம் எட்டு"

ஒய்ந்திருக்கும் பொழுது. 


"எட்டுக்கள்" நம்மை விடுவதாக இல்லை.


 இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற பிசிறின்றி கால் ஊன்றாது, தடங்கல் இல்லாது 

இரு சக்கர வாகனத்தில் முன் விரிந்த எட்டைக் கடந்தது அன்று ஆகப் பெரிய சாதனையாகத் தெரிந்தது. 


மே-1 மறக்க முடியாத நாள். 


  உழைக்கும் வர்க்கத்தினர் எட்டு மணி நேர பணிப் பொழுதை மீட்டு  வென்று வென்ற எட்டுக்குள் நுழைந்த கணங்கள் உண்மையில்  மனித வாழ்வின் உன்னதங்கள். 


அன்று, உழைப்பின் வாசனையை நுகரவிடாது பணியின் காலச் சுமை அழுத்தியது. 


இன்று 

பணியிடங்களில் வேறுவிதமாக சுமைகள் மனதை அழுத்துகின்றன. 



"எதையும் பேசாதே" . 

"எதையும் எதிர்க்கேள்வி கேளாதே" 

"நடக்கும் உள் அரசியல் எதையும் பாராதே"

  என புதியதொரு 'வரையறுக்கப்படாத கோட்பாடுகள்' பெரும்பான்மையான பணியிடங்களில் வரைபடமாகி விரிகின்றன. 

காலந்தோறும் கண் இமைகளாகும் சுமைகள். மூடித் திறந்துதான் ஆக வேண்டும். 


நிகழ் களத்தில்… 

நாள்தோறும் அடிப்படைப் பயன்பாடு முதல் ஆடம்பரம் வரை அத்தனையிலும்  ஏறும் விலைவாசி ஏற்றங்கள் உழைப்பின் மூலம் ஈட்டுதலை புற்றுக் கரையான்களாக அரித்துக் கொள்கின்றன. 


நேர்மையாகவே உழைத்து எவ்வளவு ஈட்டினாலும் காதற்ற 

ஊசியாகிறது வாழ்வு. 


"எட்டு எட்டா 

மனுச வாழ்வ பிரிச்சுக்கோ… 

எந்த எட்டில் இப்ப இருக்க

நெனச்சுக்கோ… 



நெனப்பு எதுவாயினும் 

கனவுகளைக் கைப்பிடிக்க

எட்டும் உயரத்தையேனும் 

எட்டிப் பிடிக்க… 

எட்டு மேல எட்டு வச்சு

முன் நகர்தலே… 

வாழ்வின் அழகு!" 


உழைப்பின் நிறம் எதுவாயினும் மனதின் நிறம்

'வெண்மை' தானே. 


வெண்மை அனைத்து வண்ணங்களையும் இரு கை விரித்து ஏற்கும். இறுக்கி அணைத்து ஒர் 'உம்மா' கொடுக்கும். 

உண்மை தானே… 


மனப் பறவை மனம் கொத்தும்!


பறக்கும்… 



இருதய். ஆ





அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...